தாஜ்மஹால்,
சீனப்பெருஞ்சுவர் உட்பட உலகின் எந்த அதிசயமும் கட்டைவிரல் இல்லாமல்
உருவாக முடியாது. மனிதனின் உணர்வுடன் கூடிய உழைப்பிற்கு வடிவம் தரக் கூடியது
கட்டைவிரல். மகாபாரதத்தில் போர்க்கலை வித்தைகளைக் கற்றுத்தேர்ந்த, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏகலைவன் குருதட்சனை என்ற பெயரில் உயர்ஜாதி
ஆதிக்கத் திற்குக் கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடுத்தான்.
பாரதத்தில் நேர்த்தியான
கைத்தறி நெசவு காரணமாக அன்னியத் துணிகளை விரிவாக விற்பனை செய்வது பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் கட்டை விரல்கள் பிரிட்டிஷ் கொடுங்கோலர்களால்
மனிதாபிமானமின்றி துண்டிக்கப்பட்டதை இந்திய சரித்திரத்தின் பக்கங்களில்
ரத்தக்கறையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதனின் லட்சியக் கனவுகள் எல்லாம்
கட்டைவிரல் இல்லாமல் நனவாக முடியுமா?
‘கட்டைவிரலில் வலிக்கிறது’
என்று சிகிச்சைக்கு வந்தார் ஒருவர். இடதுகையை நீட்டி, மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
வலியின் தன்மை, அதிகரிப்பு - குறைதல் குறித்த விவரம்,
இதரக் குறிகள் எல்லாம் விசாரித்தேன். “வேறு
எந்தப் பிரச்சனையுமில்லை; இரண்டு, மூன்று
மாதமாக இந்த வலி ஒன்றுதான் பிரச்சனை” என்று சுருக்கமாகப்
பதிலளித்தார். ஓரளவுகூட அவரைப் பற்றிய புரிதல் ஏற்படாமல் அவருக்குச்
சிகிச்சையளிக்க வேண்டிய இக்கட்டான நிலை.
ஓரிரு நிமிட இடைவெளி கடந்து, “உங்களைப் பற்றிய விவரங்களையும் வலியுடன் சம்பந்தப்பட்ட வேறு விஷயங்களையும்
நீங்கள் தெரியப்படுத்தினால் தான் உதவியாக இருக்கும்” என்று
கேட்டுக்கொண்டு, தாகம், நீர், மலம், பசி... குறித்து விசாரித்தேன். மீண்டும் அவர்
அழுத்தம் திருத்தமாக "வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை; இந்த
வலி ஒன்றுதான் பிரச்சனை” என்று கூறியதையே கூறிமுடித்தார்.
சிகிச்சைக் குறிப்புகள் நூல்களில் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு மருந்து
கொடுத்தனுப்பினேன்.
ஒருவாரம் கழித்து வந்தபோது,
“ஒரளவு மட்டும் வலி குறைந்துள்ளது” என்றார்.
மேலும் ஒருவார மருந்து தரப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமும்
மருந்தளிக்கப்பட்டது. நான்காவது வாரம் அவர் மீண்டும் வந்தபோது முகம் சற்று
வாடியிருந்தது. “வலி எப்படி உள்ளது?” என்று
விசாரித்தேன். “முதல்வாரம் வலி குறைந்தது; இரண்டாவது வாரம் மேலும் கொஞ்சம் வலி குறைந்தது. இப்போது மூன்றாவது வாரம்
மருந்து சாப்பிட்டபின் வலி மீண்டும் வந்து விட்டது. அது மட்டுமில்லாமல் இரவு தூக்கத்திலேயே
சிறுநீர் கழித்து ஆடையும் படுக்கையும் பாழாகி விடுகிறது” என்று
குறிப்பிட்டார்.
“இதுபோல் இதற்குமுன்னர் தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்ட துண்டா?,” என்று
கேட்டபோது “இல்லையே! இப்போது சிலநாளாகத் தான் அப்படி யுள்ளது.
கொஞ்ச நாளாக கனவில் சிறுநீர்கழிப்பது போல் தோன்றும். ஆனால் தற்போது அந்த மாதிரிக்
கனவு ஏற்படும்போது நிஜமாகவே சிறுநீரும் வெளிவந்து விடுகிறது” என்றார்.
அவருக்கு மீண்டும் பழைய மருந்து
தரவில்லை. கனவுக் குறியை மையமாகக் கொண்டு ‘கிரியோசோட்டம்’
என்ற ஹோமியோபதி மருந்து தேர்வு செய்து கொடுத்தனுப்பினேன்.
அதன்பின்னர் அவர் நீண்டநாள் வரவேயில்லை. ஒருநாள் அவரது உறவுக்காரப் பெண்ணுக்குச்
சிகிச்சை பெற அழைத்து வந்திருந்தபோது “கடைசியாக நீங்கள்
எனக்குக் கொடுத்த மருந்தில் கையிலிருந்த வலி மறைந்துவிட்டது. இரவு உறக்கத்தில்
சிறுநீர் கழிப்பதும் நின்றுவிட்டது” என்று சொல்லிவிட்டு
உறவுக்காரப் பெண்ணை அறிமுகப்படுத்தத் துவங்கினார்.
மாற்று மருத்துவம் குறித்து அறியும் போது ஆச்சர்யமாகயிருக்கிறது.
ReplyDeleteநன்றி.